செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி சாமான்கள் கொள்ளை

Published On 2016-11-20 17:58 IST   |   Update On 2016-11-20 17:58:00 IST
அரசு போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி சாமான்கள் கொள்ளை போனது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகர் அண்ணா சாலையை சேர்ந்தவர் தவமணி (வயது43). இவர் அரசு போக்குவரத்து பணிமனை டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்றார். நேற்று இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 39¾ தங்க நகைகளும், வீட்டில் இருந்த 10 கிலோ வெள்ளி சாமான்களும் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும்.

இது குறித்து தேவக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் தவமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

இன்று காலை கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News