செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மர்ம மரணம்

Published On 2016-11-15 17:08 IST   |   Update On 2016-11-15 17:09:00 IST
ரெயில்வே தண்டவாளம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை பெராக்கா நகரைச் சேர்ந்தவர் ஆஸ்கர் (வயது45), அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக இருந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வந்தார். நேற்று மாலை பிரசாரம் முடித்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆஸ்கரும் தனது வீட்டிற்கு போவதாக சொல்லி சென்றார்.

இந்த நிலையில் அங்குள்ள ரெயில்வே கிராசிங் பகுதியில் ஆஸ்கர் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர். பிணமாக கிடந்த ஆஸ்கரின் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டன.

அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து தண்டவாள பகுதியில் வீசி சென்றார்களா? என்பதில் மர்மம் நிலவுகிறது. ரெயில்வே போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

தண்டவாள பகுதியில் உடல் கிடந்ததால் ரெயில்வே போலீசார் ஆஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் இறந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News