செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-11-07 17:23 IST   |   Update On 2016-11-07 17:23:00 IST
ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொல்லாபுரம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். இவரது மனைவி அமுதா (35). மாடுகளுக்கு கொம்பு சீவும் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், ராஜதுரை என்ற மகனும் உள்ளனர். ராதிகாவிற்கு திருமணமாகி தனது கணவருடன் மணப்பாறை மஞ்சம்பட்டியில் வசித்து வருகிறார். மகன் ராஜதுரை தந்தையுடன் தொழில் செய்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் அமுதா வாந்தி எடுத்துள்ளார். இதுபற்றி எம்.ஜி.ஆர். கேட்டபோது குருணை மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையறிந்த எம்.ஜி.ஆர். மற்றும் பொதுமக்கள் அமுதாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அமுதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். மீன்சுருட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

இதே போல் விக்கிரமங்கலம் அருகேயுள்ள செட்டி திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (40). இவரது மனைவி உத்திராபதி (35). உத்திராபதிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.

இதனால் விரக்தியடைந்த இவர் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை தின்று விட்டார்.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உத்திராபதி இறந்தார்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

Similar News