செய்திகள்

குடும்ப பிரச்சினையில் மனைவி, மகளை கொல்ல முயன்றவருக்கு 2 ஆண்டு சிறை

Published On 2016-11-04 22:43 IST   |   Update On 2016-11-04 22:43:00 IST
குடும்ப பிரச்சினையில் மனைவி, மகளை கொல்ல முயன்றவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 42). இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கோபிகா (12) என்ற மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து கேட்டும், ஜீவனாம்சம் கோரியும் அரியலூர் கோர்ட்டில் பூங்கொடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 30–5–2016 அன்று ஏற்பட்ட தகராறில் இளங்கோவன் தனது மனைவி பூங்கொடி மற்றும் மகள் கோபிகா ஆகியோரை கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து வெங்கனூர் போலீசில் பூங்கொடி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்து அரியலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், இளங்கோவன் மனைவியை கத்தியால் வெட்டியதற்கு 2 ஆண்டும், மகளை கத்தியால் வெட்டியதற்கு 2 ஆண்டும் சிறை தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், மனைவி–மகளுக்கு ரூ.1½ லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.

சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருப்பதால் 2 ஆண்டு சிறை தண்டனையையே இளங்கோவன் அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் இளங்கோவனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News