செய்திகள்

பெண்ணாடம் அருகே முதியவர் மீது மோதிய பஸ்: கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2016-10-28 17:14 IST   |   Update On 2016-10-28 17:15:00 IST
பெண்ணாடம் அருகே பஸ் முதியவர் மீது மோதிய சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்:

திட்டக்குடியில் இருந்து சிதம்பரத்திற்கு 50 பயணிகளுடன் தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. அந்த பஸ் பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது எதிர்பாராதவிதமாக தனியார் பஸ் மோதியது. இதில் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை அந்த பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த துறையூர் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு துறையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜா சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், துறையூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க உடனடியாக வேகத்தடை, தடுப்புவேலி உடனடியாக அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆர்.டி.ஓ.வும் சம்பவ இடத்திற்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News