செய்திகள்

புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்

Published On 2016-10-16 15:03 GMT   |   Update On 2016-10-16 15:03 GMT
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று 14 கிலோமீட்டர் மலையை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகைதீப திருவிழா, சித்ரா பவுர்ணமி கிரிவலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

இந்த மாதத்துக்கான (புரட்டாசி) பவுர்ணமி நேற்று மதியம் 12.36 மணிக்கு தொடங்கி இன்று (ஞயிற்றுக்கிழமை) காலை 10.27 மணிக்கு முடிகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை நாட்கள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பவுர்ணமியையொட்டி நேற்று காலை அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெளிமாநில பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதியம் 1 மணி முதல் பக்தர்கள் பலர் கிரிவலம் செல்ல தொடங்கினர். பின்னர் மாலை 4 மணி முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. 6 மணியளவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இன்று காலை 10 மணி வரை பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டிருந்தனர்.

கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நகரின் முக்கிய நுழைவு வாயில்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல இரவு வேளையில் ரெயில் நிலையம், பஸ்நிலையங்களில் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதை உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Similar News