செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி டிரைவர் பலி: போலீசார் விசாரணை

Published On 2016-10-06 10:28 GMT   |   Update On 2016-10-06 10:28 GMT
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் குமார் (வயது 25) லாரி டிரைவர். இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலையில் சிமெண்ட் ஏற்றி வருவதற்காக கும்பகோணத்தில் இருந்து டாரஸ் லாரியை ஓட்டிச் சென்றார்.

அப்போது தா.பழூர் - விளாங்குடி சாலை சுந்தரேசபுரம் தனியார் பள்ளி அருகே நிறுத்தி பின்பக்க டயர்களில் காற்று போதுமான அளவு சரியாக உள்ளதா? என பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதியதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் சம்பவ இடம் விரைந்து சென்று தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், கணேசபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பிரபு (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News