செய்திகள்

வேதாரண்யத்தில் மாமியாருக்கு அடி, உதை: மருமகன் கைது

Published On 2016-09-20 15:46 IST   |   Update On 2016-09-20 15:46:00 IST
வேதாரண்யத்தில் மாமியாருக்கு தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் சத்திரத்தடி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி மீனாட்சி (40). இவரது மருமகன் செந்தில். (26). செந்திலின் அண்ணன் முருகானந்தம் விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பார்ப்பதற்காக செந்தில் தனது மாமனார் பசுபதியின் மோட்டார் சைக்கிளை யாரிடமும் சொல்லாமல் தனது நண்பருடன் திருவாரூர் சென்று, தனது அண்ணனை பார்த்து விட்டு திரும்ப கொண்டு வந்து வைத்துள்ளார்.அப்போது செந்திலின் மாமியார் மீனாட்சி, செந்தில் நண்பரிடம் ஏன் சொல்லாமல் எடுத்து சென்றீர்கள், சொல்லி விட்டு எடுத்து சென்றிருக்கலாமே என கேட்டுள்ளார்.

இதைகேட்ட செந்தில் தனது மாமியார் மீனாட்சியை தரக்குறைவாக பேசி தலைமுடியை பிடித்து இழுத்து காலால் உதைத்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மீனாட்சி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

Similar News