செய்திகள்

கடன் தொல்லையால் தூக்கில் தொங்கிய தம்பதியினர்: கணவர் பலி- மனைவிக்கு தீவிர சிகிச்சை

Published On 2016-09-18 17:47 IST   |   Update On 2016-09-18 17:47:00 IST
பவானி அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கில்தொங்கியதில் கணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பவானி:

பவானி அருகே உள்ள சித்தோடு செங்குந்தபுரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் ஒரு தனியார் மில்லில் வாட்ச் மேனாக வேலை பார்த்தார். இவரது மனைவி செல்வி (45).

இவர்களுக்கு சுபாஷினி (17), பிரிமதி (14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே அறையில் தூங்குவார்களாம். கணேசனுக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கடன் தொல்லையால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கணேசன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் இரவு கயிற்றால் தூக்கு மாட்டி கொண்டு துடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கால்கள் தூங்கி கொண்டிருந்த மகள்கள் மீது பட்டது.

நம்மை யார் உதைப்பது? என எழுந்து பார்த்தனர். அப்போது தனது அப்பா மற்றும் அம்மா ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து மகள்கள் கதறி அழுதனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்து பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது கணேசன் இறந்து விட்டதாக கூறினர். பிறகு மனைவி செல்வியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News