செய்திகள்

புதுவையில் கூரைவீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்: நாராயணசாமி சட்டசபையில் தகவல்

Published On 2016-09-01 19:37 IST   |   Update On 2016-09-01 19:37:00 IST
புதுவையில் எத்தனை கூரை வீடுகள் உள்ளது? எத்தனை கல்வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து கணக்கு எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

வையாபுரிமணிகண்டன்: புதுவை அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்படும் காமராஜர் இலவச கல்வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.2 லட்சத்தை உயர்த்தி வழங்க அரசுக்கு எண்ணம் உண்டா? எப்போது வழங்கப்படும்?

முதல்அமைச்சர் நாராயணசாமி: இது குறித்து பரிசீலிக்கப்படும்.

வையாபுரிமணிகண்டன்: கட்டுமான பொருட்களின் விலைவாசி அனைத்தும் கடுமையாக உயர்ந்து விட்டது. இந்நிலையில் அரசு வீடு கட்ட ரூ.2 லட்சம் நிர்ணயித்திருப்பது போதியதாக இருக்காது. எனவே இத்தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல ஏற்கனவே கல்வீடு கட்ட விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டாம் கட்டம், 3-ம் கட்ட தவணை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. பலர் பாதி அளவு வீடு கட்டிய நிலையில் நிதி இல்லாமல் நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கான பத்திரத்தையும் அரசு வழங்கவில்லை. கல்வீடு கட்டும் பிரச்சினையில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் களைய வேண்டும்.

நாராயணசாமி: வீடு கட்டும் பிரச்சினை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, கூடுதலாக நிதி வழங்குவது, நிலுவையில் உள்ள தொகையை வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு 5 ஆயிரம் வீடுகள் கட்டித்தர ஒப்புதல் அளித்துள்ளார். அந்த நிதியையும் பெற அரசு முயற்சிக்கிறது.

புதுவையில் எத்தனை கூரை வீடுகள் உள்ளது? எத்தனை கல்வீடுகள் பாதிகட்டப்பட்டுள்ளது? என்பது குறித்து கணக்கு எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சர்வே இன்றே தொடங்கப்பட்டுள்ளது. புதுவையை குடிசையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசு நிதி மற்றும் மாநில அரசு நிதி மூலம் புதுவை குடிசையில்லாத மாநிலமாக மாற்றப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Similar News