செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2016-08-31 15:50 IST   |   Update On 2016-08-31 15:51:00 IST
கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு பிறகும் வெயிலின் அளவு சதத்தை தாண்டியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை 2 மணிநேரம் கொட்டி தீர்த்தது. வழக்கம்போல் நேற்று காலை வெயில் அடிக்க தொடங்கியது. மதியம் 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டியது.

கடலூர் மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், கோண்டூர், கூத்தப் பாக்கம், பாதிரிக்குப்பம், துறைமுகம், சிப்காட், ரெட்டிச்சாவடி, திருவந்தி புரம், வெள்ளகேட், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருகி ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக வெப்பம் தனிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News