செய்திகள்

நாகையில் பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது

Published On 2016-08-18 16:42 IST   |   Update On 2016-08-18 16:43:00 IST
பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை காடம்பாடி புதிய கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்பில் கடந்த 9-ந்தேதி பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணத்தின் அருகே மதுபாட்டிலும், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட், செருப்புகள் உள்ளிட்டவைகளும், பிணத்துக்கு அடியில் ஒரு செல்போனும் கிடந்தது.

அந்த செல்போனை எடுத்த போலீசார் அதில் உள்ள நம்பரை கொண்டு தொடர்பு கொண்டபோது, இறந்து கிடந்த பெண் நாகை மாவட்டம் சீர்காழி புதுப்பட்டினம் போலீஸ் சரகம் தாண்டவன்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி தனலட்சுமி (வயது46) என்பதும், சீர்காழி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சுண்டல் விற்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சீர்காழி அருகே உள்ள பழையார் பகுதியில் உள்ள மீன் இறங்கும் இடத்தில் வேலை பார்த்து வரும் சிவலிங்கம் (46) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

நாகை நம்பியார்நகர் கன்னிகோவில் பகுதியை சேர்ந்த இவர், தற்போது பழையாறில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சிவலிங்கம் பழையார் பகுதியில் வேலை பார்க்கும்போது அவருக்கும், தனலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 8-ந்தேதி நாகை புதிய கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்புக்கு தனலட்சுமியை அழைத்து வந்துள்ளார். அங்கு இரவு தனிமையில் இருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவலிங்கம், தனலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து நாகை முதலாவது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Similar News