மயிலாடுதுறையில் தீ விபத்தில் பெண் பலி
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை கேணிகரை பகுதியில் உள்ள அலங்கார தெருவை சேர்ந்தவர் பாவாடைசாமி. இவரது மனைவி தையல்நாயகி.
இவர்களது வீட்டில் தையல்நாயகியின் அக்காள் அம்சம் (55) வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
நேற்று இரவு பாவாடை சாமி வீட்டில் அவரது மனைவி தையல்நாயகி, மகன் அய்யப்பன், மகள் ரம்யா மற்றும் அம்சம் ஆகியோர் படுத்து தூங்கினர். இந்தநிலையில் இன்று அதிகாலை அவர்கள் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதனை கண்ட அனைவரும் வெளியே வந்துவிட்டனர். மாற்றுத்திறனாளியான அம்சம் மட்டும் தீயில் சிக்கி கொண்டார். கூரை வீட்டில் தீ மளமளவென பரவியதால் உள்ளே சென்று அவரை மீட்க முடியவில்லை. இதில் அம்சம் உயிரோடு எரிந்து பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.
தீ விபத்தில் பெண் எரிந்து பலியான சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தீ விபத்தில் சேதமான வீட்டையும், பலியான அம்சம் உடலையும் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.