பொறையார் அருகே அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல்
தரங்கம்பாடி:
பொறையார் அருகே உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கீழத் தெருவை சேர்ந்த பாப்பையன் மகன் பன்னீர்செல்வம், மாணிக்கம் மகன் இளவரசன், செல்வம் மகன்கள் ஸடீபன்ராஜ், முருகானந்தம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக அவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் அருள் மற்றும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அருள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியாக உள்ளார்.
இந்த பகுதியில் அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம், இளவரசன், ஸ்டீபன்ராஜ், முருகானந்தம், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதுதொடர்பாக அருள் மற்றும் சிலர் தகராறு செய்து நேற்று மோதிக் கொண்டனர். இதில் காயமடைந்த அதிமுகவை சேர்ந்த 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அருள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றிய புகாரின்பேரில் பொறையார் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.