செய்திகள்

குத்தாலத்தில் தி.மு.க. கூட்டத்தில் கோஷ்டி மோதல்: நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு

Published On 2016-08-11 17:54 IST   |   Update On 2016-08-11 17:54:00 IST
குத்தாலத்தில் தி.மு.க. கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் அங்குமிங்கும் நாற்காலிகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலத்தில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகப்பா வரவேற்றார். இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது குத்தாலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அதற்கு நகர மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து கட்சி அலுவலக கதவை இழுத்து மூடினர். மனோகரனின் ஆதரவாளர்கள் கதவை தள்ளி திறக்க முயன்றபோது இரு கோஷ்டியினருக்கும் இடையே தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் அங்குமிங்கும் நாற்காலிகள் வீசப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் கூச்சல் தொடர்ந்ததால் கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. பின்னர் குத்தாலத்தில் உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலாவது கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று மூத்த தி.மு.க. நிர்வாகிகள் மேடையிலேயே அறிவுரை வழங்கினர். இச்சம்பவத்தால் நேற்று குத்தாலம் கடைவீதியே பரபரப்பு அடைந்து காணப்பட்டது.

Similar News