வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கடைசியில் 5 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கும்.
இந்த திருவிழாவில் பழங்கள்ளிமேட்டைச் சேர்ந்த தலித் மக்கள் தங்களுக்கு ஒரு நாள் மண்டகபடி வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான பிரச்சினை நீடிப்பதால் கோவில் தீருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டு வழி பாட்டுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளா செல்வன் தலைமையில் அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வேதை தொகுதி செயலாளர் செல்வராசு, துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் பாவரசு, மாவட்ட செயலாளர் குணவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் பேரறிவாளன் மற்றும் 30 பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தாலுக்கா அலுவலக வாயிலில் காவலுக்கு இருந்த காவலர்களை மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சிம்சன், துணைச் செயலாளர் அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.