மனைவி கண்முன் கணவர் விபத்தில் பரிதாப சாவு
ஈரோடு:
ஈரோட்டை அடுத்த 46 புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 53). இவரும் இவரது மனைவி மணிமேகலையும் (37) ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இவர்கள் கொடுமுடி அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்தபோது எதிரே ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து கணவன்– மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். தலையிலும், நெஞ்சிலும் பலத்த அடிப்பட்டு தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தன் கண்முன்னே கணவர் பலியானதை கண்டு மணிமேகலை கதறி அழுதார்.
விபத்தில் பலியான தங்கராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.