செய்திகள்

தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது: வைகோ பேச்சு

Published On 2016-07-02 15:38 IST   |   Update On 2016-07-02 15:38:00 IST
தி.மு.க.வில் சுயமரியாதை இல்லை. அது குறைந்து வருகிறது என சிவகங்கையில் வைகோ பேசினார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:–

ம.தி.மு.க. சிறிய கட்சி தான். முல்லை பெரியாறு பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை சாதித்தது நமது கட்சிதான். மற்ற கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை சாதித்தது இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட இருந்ததை ம.தி.மு.க. தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கியது.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பணம் பிரதானமாக விளங்கியது. பணம்தான் ஜனநாயகத்தை தோற்கடித்தது. தேர்தலில் ஒரு இடம்கூட நாம் ஜெயிக்க முடியாது என்பது எனக்கு முன்பே தெரியும். மக்கள் நமது சேவையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தலில் பணத்திற்கு அடிமை ஆகிறார்கள்.

தி.மு.க.வில் சுயமரியாதை இல்லை. அது குறைந்து வருகிறது. தி.மு.க. நம்மை அழிக்க நினைக்கிறது. இத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் நம்மை அழிக்க முயற்சித்து இருப்பார்கள். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று ராஜதந்திர முடிவினை எடுத்தேன். இதனால் மாற்று அணி அமைந்தது.

வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் குறித்து போராடி வருவதை ம.தி.மு.க. ஆதரிக்கிறது. சென்னையில் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. இதை அரசு தடுத்திட வேண்டும். மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News