செய்திகள்

பூட்டிக்கிடந்த வீடுகளில் திருட்டு: மதுரை வாலிபர் உள்பட 2 பேர் கைது

Published On 2016-06-27 23:08 IST   |   Update On 2016-06-27 23:08:00 IST
தேவகோட்டையில் பூட்டி கிடந்த வீடுகளில் திருடிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய் யப்பட்டது.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் பூட்டி கிடந்த வீடுகளை குறிவைத்து நகை–பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மொத்தம் 11 வீடுகளில் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிச் சாமான்கள், செல்போன், லேப்–டாப், மோட்டார் சைக்கிள் ஆகியவை திருட்டு போயின.

இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் 2 கொள்ளையர்கள் சிக்கினார்கள். விசாரணையில் அவர்கள் தேவகோட்டை ரகுநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் முத்துக்குமார் (வயது 31), மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த உலகநாதன் மகன் கனகவேல் பாண்டியன் (32) என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப் பட்டனர்.

அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 2 கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த வழக்கில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதில் தொடர்புடைய திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கண்ணன் (வயது 56) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகை–பணம் மற்றும் பொருட்களை கண்ணனிடம் கொடுத்துள்ளதாக கைதான இருவரும் தெரிவித்தனர். எனவே கண்ணனை தேடிப்பிடிக்கும் பணியில் தேவகோட்டை தனிப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News