செய்திகள்
திருப்பத்தூர் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு
திருப்பத்தூர் அருகே உள்ள வஞ்சினிபட்டி ஊராட்சி மன்ற தலைவரை முன்விரோதம் காரணமாக தாக்கிய தந்தை-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஓன்றியம் வஞ்சினிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கண்ணன். இவர் 2 முறை இக்கிராமத்தில் தலைவராக உள்ளார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, அவரது மகன் சுப்புராம் ஆகியோருக்கும் சுற்று சுவர் எடுப்பதில் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்பு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வெள்ளைச்சாமி, அவரது மகன் சுப்புராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.