செய்திகள்

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2016-06-10 10:10 IST   |   Update On 2016-06-10 10:10:00 IST
சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் பலியான மீனவர் உடல் மீட்கப்பட்டது.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது தொடுவாய் மீனவர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சந்திரகாசன் (60), ராம்குமார், மணிவண்ணன், வீரச்செல்வம், ராஜா ஆகியோர் கடந்த 7–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது. அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் உதவியோடு கவிழ்ந்த படகை சரி செய்து அதே படகில் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். ஆனால் மீனவர் சந்திரகாசன் மட்டும் கரை திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கீழ மூவர்க்கரை பகுதி கடலில் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சந்திரகாசன் உடல் மிதந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீனவர்கள் 10 பைபர் படகுகளில் அங்கு சென்றனர்.

கடலில் மூழ்கி பலியான சந்திரகாசன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் அங்கு சென்று உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Similar News