கடலூரில் சூறாவளி காற்றுடன் மழை: 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
கடலூர்:
ஆண்டுதோறும் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பொதுமக்கள் கையில் குடை பிடித்துக்கொண்டும், வாகன ஓட்டிகள் தொப்பி மற்றும் துணியால் முகத்தை போர்த்தியபடியும் சென்றனர். மேலும் கடுமையான அனல் காற்று வீசியது.
இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததோடு, இயல்பு வாழ்க்கை பாதித்தது.மழை பெய்தால்தான் வெப்பத்தின் தாக்கம் தணியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் கடந்த 15ந் தேதி இரவு முதல் மழை தொடங்கி சுமார் 4 நாட்கள் பெய்தது.
இதனால் கடுமையான வெப்ப காற்று மறைந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து பெரும் மூச்சு விட்டனர். பின்னர் கடந்த சில நாட்களாக 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை கடும் வெயில் கடலூர் மாவட்டத்தில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மீண்டும் கடும் வெயிலால் துன்பம் அடைந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் இடித்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் மற்றும் நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம், காரா மணிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு லேசான மழை சிறிது நேரம் பெய்தது. ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
கடலூர் குமளங்குளம், கொடுக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
அந்த பகுதிகளில் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்த னர்.
சூறாவளி காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.