செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு

Published On 2016-05-28 11:10 IST   |   Update On 2016-05-28 11:10:00 IST
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் கற்பழித்த காதலனை போலீஸ் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள மணக்கொல்லையைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவரது மகள் வினிதா (வயது 22). இவர் தொழுதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

வினிதா தொழுதூரில் படிக்கும்போது தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார். அப்போது சந்தோஷ்குமார் தொழுதூருக்கு சென்று வினிதாவை அடிக்கடி பார்த்துவிட்டு வருவது வழக்கம். அப்போது அவர் கொண்டு சென்ற குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வினிதாவை குடிக்க வைத்தார். குளிர்பானத்தை குடித்த வினிதாவிற்கு மயக்கம் ஏற்பட்டது.

அப்போது சந்தோஷ் குமார் வினிதாவை கற்பழித்து உள்ளார். மயக்கம் தெளிந்த வினிதா அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக வினிதா சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்தார். அதற்கு வினிதாவை திருமணம் செய்து கொள்வதாக சந்தோஷ்குமார் ஆசை வார்த்தை கூறினார்.

அதன்பின்னர் இருவரும் பல இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தனர்.

இந்தநிலையில் சந்தோஷ் குமாருக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதாக வினிதாவிற்கு தெரியவந்தது. சம்பவத்தன்று வினிதா சந்தோஷ்குமாருக்கு செல்போனில் கேட்டபோது அவரை ஆபாசமாக சந்தோஷ்குமார் திட்டினார். இதுப்பற்றி வினிதா பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கேட்பதற்காக வினிதா அவரது பெற்றோருடன் சந்தோஷ் குமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது சந்தோஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் ரவி, அவரது மனைவி சிவநந்தினி, வீரப்பன், அவரது மனைவி கலைச்செல்வி, போத்ராஜா, அவரது மனைவி சந்திரா ஆகிய 7 பேரும் சேர்ந்து வினிதாவையும் அவரது பெற்றோரையும் சரமாரி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து வினிதா விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து ரவி, கலைச்செல்வியை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

Similar News