செய்திகள்

ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: நாளை தேரோட்டம் நடக்கிறது

Published On 2016-05-16 23:14 IST   |   Update On 2016-05-16 23:14:00 IST
ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாயொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
ராயவரம்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ராயவரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 6-ம்நாள் திருவிழாவில் பனை ஓலை சப்பரத்தில் முத்துமாரியம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பச்சைப்பட்டு உடுத்தி காளை வாகனத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள்மேளம், தாளம், முழங்க வாணவேடிக்கையுடன் நடந்த  வீதி உலா, வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று அம்மனை வழிபட்டனர். இதில் அரிமளம், ராயவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அரிமளம் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முதலில் முத்துமாரியம்மனை தேரில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது. இதற்கான முன்னேற்படாக தேரோடும் வீதிகளில் சாலைகளை சீரமைப்பு, மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதை உயர்த்தி கட்டுதல் போன்ற பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அங்காங்கே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீர்மோர், சர்பத் போன்றவை வழங்க பந்தல் அமைத்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேரோட்டத்தில் அரிமளம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Similar News