உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் பிரபல கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது

Published On 2023-03-05 07:33 GMT   |   Update On 2023-03-05 07:33 GMT
  • மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர்.
  • சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதமாக, வழக்கத்தைவிட கூடுதலாக கஞ்சா விற்பனை நடந்தவண்ணம் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு வந்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, சிறு, சிறு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்துவந்தனர்.

ஆனால், இவர்களுக்கு மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர். இந்நிலையில், காரைக்காலை அடுத்த நிரவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற விஷ்ணு பிரியனை கடந்த வாரம் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது நண்பர் ரஜினி சக்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த கோழி என்ற ரஞ்சித்(வயது29) , காரைக்கால் லத்தீப் நகரை சேர்ந்த மொஹம்மத் அபிரிடியுடன்(23) இணைந்து, சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால், இருவரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில், தரங்கம்பாடி சென்று, அங்கு பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிமிடருந்து ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News