உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே 17 வயது சிறுமி கர்ப்பம்-வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-11-24 09:36 GMT   |   Update On 2022-11-24 09:36 GMT
  • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி சிறுமியை வாலிபர் திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதை டாக்டர்கள் ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

இது குறித்து அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

Tags:    

Similar News