செய்திகள்

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் திடீர் அறிவிப்பு

Published On 2017-06-02 18:36 IST   |   Update On 2017-06-02 18:36:00 IST
சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடுகிறது. பிராந்திய மொழி படங்கள்தான் இந்தியாவின் பலம்.

எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன். இந்த அளவிலான ஜி.எஸ்.டி. வரியை இந்தி திரையுலகம் ஏற்றாலும் நாங்கள் ஏற்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News