செய்திகள்

இன்று 3-வது நாள்: மண்டபத்துக்கு வெளியே நின்ற ரசிகர்களையும் ரஜினி சந்தித்தார்

Published On 2017-05-17 12:32 IST   |   Update On 2017-05-17 13:33:00 IST
நடிகர் ரஜினி காந்த் இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடந்து வரும் இந்த சந்திப்பில், முதல் கட்டமாக 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். தினமும் 3 மாவட்டங்களை சேர்ந்த 750 ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.


முதல் நாளில் கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 2-வது நாளான நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 3-வது நாளான இன்று விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார்.

இன்று சந்திப்பதற்காக அடையாள அட்டையுடன் வந்த 3 மாவட்டங்களையும் சேர்ந்த 750 ரசிகர்களும் ராகவேந்திரா மண்டபத்தின் உள்ளே, இருக்கையில் உட்கார வைக்கப்பட்டனர். வரிசை எண்களின்படி அவர்கள் ரஜினியை சந்திக்க தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாத ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினியை பார்ப்பதற்காக மண்டபத்துக்கு வெளியே கூடி நின்றனர். ரஜினி அந்த வழியாக போகும் போது எப்படியாவது பார்த்து விடலாம் என்று காத்து இருந்தனர்.

காலை 8.55 மணிக்கு மண்டபத்துக்கு வந்து கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று ரோட்டில் நின்றது. அந்த காரில் இருந்து இறங்கி வந்த ரஜினி கூடி நின்ற ரசிகர்களை திடீரென்று சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரை கண்டதும் ரசிகர்கள், ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘தலைவர் ரஜினி வாழ்க’ என்று கோஷமிட்டனர்.


அவர்களை அமைதிப்படுத்திய ரஜினி, "நீங்கள் என்னை காண வந்தது மகிழ்ச்சி'' என்று கூறியபடி அனைவருக்கும் வணக்கம் சொன்னார். பின்னர் கைகளை அசைத்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சிறிது நேரம் ரசிகர்களுடன் நின்ற ரஜினி பின்னர் காரில் ஏறி மண்டபத்துக்கு சென்றார்.

அங்கு காத்திருந்த ரசிகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு சென்று ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்று ரஜினி சந்தன கலர் ஜிப்பா அணிந்து இருந்தார். ரசிகர் ஒருவர் அவரது மகனுடன் புகைப்படம் எடுக்க வந்தார். அந்த சிறுவனை ரஜினி தனது மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.


புகைப்படம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் சிறிது நேரத்தில் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நாளை 4-வது நாள் கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். 19-ந் தேதி வரை முதல் கட்ட சந்திப்பு நடக்கிறது. 2-வது கட்டமாக அடுத்த மாதம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News