செய்திகள்
சுதந்திர தினத்தில் புதிய கார் மாற்றிய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமராக பதவியேற்றதில் இருந்து கஸ்டமைஸ் செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார் பயன்படுத்தி வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் ரேன்ஜ் ரோவர் காரினை பயன்படுத்தி வருகிறார்.
புதுடெல்லி:
இந்திய பிரதமராக மே 2014-இல் பதவியேற்ற நரேந்திர மோடி அலுவல் பயன்பாட்டிற்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட பி.எம்.டபுள்.யூ. 7 சீரிஸ் காரினை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரை மாற்றிவிட்டு வேறு காரினை பயன்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற வருகை தந்த நரேந்திர மோடி, பி.எம்.டபுள்யூ. 7சீரிஸ் காரை தவிர்த்து புத்தம் புதிய ரேன்ஜ் ரோவர் காரில் செங்கோட்டை வந்தடைந்தார். முதல் முறையாக ஆடம்பர ரக எஸ்.யு.வி. காரில் நரேந்திர மோடியின் வருகை அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் பயன்படுத்தி வரும் வாகனம் மாற்றப்பட்டிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய ஆடம்பர கார் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று முதல் தனது காரினை மாற்றியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
நரேந்திர மோடி தற்சமயம் பயன்படுத்தி வரும் எஸ்.யு.வி. 2010-ம் ஆண்டை சேர்ந்த ரேன்ஜ் ரோவர் HSE ஆகும். இந்த மாடலில் 5.0 லிட்டர் V8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஆடம்பர எஸ்.யு.வி. மாடலினை ஜாகுவார் லேண்ட் ரோவர் தயாரித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உரிமம் டாடா மோட்டார்ஸ் வசம் உள்ளது.