செய்திகள்
வந்தவாசி தொகுதி

வந்தவாசி தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-25 06:50 GMT   |   Update On 2021-03-25 06:50 GMT
பாமக- திமுக நேருக்குநேர் மோதும் வந்தவாசி தொகுதி கண்ணோட்டம்
அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் எஸ். முரளிசங்கர், திமுக சார்பில் எஸ். அம்பேத்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாவதி, அமமுக சார்பில் பி. வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.

பா.ம.க. வேட்பாளர் எஸ். முரளிசங்கர் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 1,00,000
2. அசையும் சொத்து- ரூ. 26,70,000
3. அசையா சொத்து- ரூ. இல்லை

வந்தவாசி தொகுதி பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டதாகும்.

வந்தவாசி போர்

மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதும் 1760-ல் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை வெற்றி கொண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அடிகோலியதும் வந்தவாசியில்தான் என்பது வரலாற்று நிகழ்வாகும். இநத போர் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்து போராகும்.

ஆங்கிலத் தளபதி அயர்கூட் தலைமையிலான படையை பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இதையடுத்து இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சி அடைந்தனர். இந்த வெற்றிதான் ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவை 187 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் நிலை உருவானது.



வந்தவாசி பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களும், ஜைன கோவில்களும், சீயமங்கலம் குகைக்கோவிலும் உள்ளன.

இந்த தொகுதிக்கு உட்பட்ட வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரம் கொண்ட தவளகிரி ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு பிரசித்தி பெற்றதாகும். மேலும் தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் கோவில், மாம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் மற்றும் புகழ்பெற்ற மசூதிகள் தேவாலயங்கள் உள்ளன.

கோரைப்பாய்

பல வருடங்களாக பின்தங்கிய நிலையில் உள்ள இந்த தொகுதியில் மக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். விவசாயம், கைத்தறி நெசவாளர்கள், கோரைப்பாய் நெசவு தொழிலாளர்களும் நிறைந்த தொகுதியாகும் மற்றும் நெல், கரும்பு, நிலக்கடலை அதிகம் பயிரிடுகின்றனர். வந்தவாசி கோரைப்பாய் புகழ் பெற்றதாகும்.



திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள இந்த தொகுதி இதுநாள் வரையிலும் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் இன்றி பின் தங்கியுள்ளது. வந்தவாசி தொகுதியை பொறுத்த வரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர்.

மொத்த வாக்காளர்கள் 2,39,760 பேர், ஆண்கள் 1,18,230 பேர், பெண்கள் 1,21,439 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 1.

2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டதுடன் அந்த தொகுதியில் இருந்து கிராமங்கள் செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டது. வந்தவாசி தொகுதியில் வந்தவாசி நகராட்சி, வந்தவாசி ஒன்றியம், தெள்ளார் ஒன்றியம், தேசூர் மற்றும் பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.

280 வாக்குச்சாவடிகள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆணையத்தின் உத்தரவுபடி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால் வந்தவாசி தொகுதியில் தற்போது 280 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



வந்தவாசி தொகுதி 1952-ம் ஆண்டும், 1957-ம் ஆண்டும் இரட்டை உறுப்பினர்களை கொண்ட பொதுத் தொகுதியாக இருந்தது. பின்னர் 1962-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

தி.மு.க. 8 முறை வெற்றி

1962-க்கு பிறகு கடந்த தேர்தல்களில் தி.மு.க. ஒரு இடைத்தேர்தல் உள்பட 8 முறையும் அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ், பா.ம.க. தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். தெள்ளார்- கொடுங்காலூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வந்தவாசி தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்காகவும், பொருளாதாரம் மேம்படுவதற்கும் இந்த பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை நிறுவ வேண்டும்.



விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் விவசாய கல்லூரி, விவசாய ஆய்வு மையம் அமைக்க வேண்டும். வந்தவாசி தொகுதியில் நெசவாளர்கள் அதிகமாக உள்ளதால் நூற்பாலை அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளை தூர்வார வேண்டும். மேலும் ஏரிப்பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.




1951 சோமசுந்தரகவுண்டர்- பொதுநலகட்சி
1957 ராமசந்திர ரெட்டி- காங்கிரஸ்
1962 முத்துலிங்கம்- தி.மு.க.
1967 முத்துலிங்கம்- தி.மு.க
1971 ராஜகோபால்- தி.மு.க.
1977 முனுசாமி- அ.தி.மு.க.
1980 குப்புசாமி- அ.தி.மு.க.
1984 ஆறுமுகம்- காங்கிரஸ்
1989 தனராசு- தி.மு.க.
1991 சி.கே. தமிழரசன்- அ.தி.மு.க.
1996 பாலா ஆண்டான்- தி.மு.க.
2001 முருகவேல் ராசன்- பா.ம.க.
2006 ஜெயராமன்- தி.மு.க.
2011 குணசீலன்- அ.தி.மு.க.
2016 அம்பேத்குமார்- தி.மு.க.
Tags:    

Similar News