ஐ.பி.எல்.(IPL)
உதயநிதி ஸ்டாலின்

பாஜக தமிழகத்தில் எந்த காலத்திலும் காலூன்ற முடியாது- உதயநிதி ஸ்டாலின்

Published On 2021-03-24 09:56 IST   |   Update On 2021-03-24 09:56:00 IST
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டையில் தி.மு.க. வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரனையும்,, திருச்சுழியில் தங்கம் தென்னரசுவையும், விருதுநகரில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனையும், சாத்தூரில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனையும், ராஜபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் தங்கப்பாண்டியனையும் ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

பா.ஜ.க. தமிழகத்தில் எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் மீது கோபம். அதனால்தான் ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை தராமல் இழுத்தடிக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் தயவால் முதல்-அமைச்சர் ஆனவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் அல்ல. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் மக்களின் கஷ்டம் என்னவென்று அவருக்கு தெரியும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

பிரதமர் மோடியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நம்பாதீர்கள். மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு வேறு எந்த பணியும் நடக்கவில்லை.

தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சொகுசு விமானத்தை ரூ.8 ஆயிரம் கோடியில் வாங்கி சுற்றுப்பயணம் செய்தார். மக்களுக்காக அவர் எதுவும் செய்யவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெற செய்தீர்கள். அதேபோல் இம்முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News