தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பொய் வாக்குறுதிகளை கொடுக்கிறார்- டிடிவி தினகரன் பேச்சு
நாகப்பட்டினம்:
நாகை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மஞ்சுளா சந்திரமோகன், கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் நீதி மோகன், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து நாகை அவுரி திடலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார்.
லஞ்சம் லாவண்யம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம். வெளிப்படையாக நிர்வாகத்தை மேற்கொள்வோம். அனைவருக்கும் வேலை வாய்ப்பு செய்து தரப்படும். தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இட ஒதிக்கீடு பிரச்சனையில் பொய் கூறி வருகிறார். ஒவ்வொரு சமுதாயத்தையும் எடப்பாடி ஏமாற்றி வருகிறார். அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. அவர்களும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.
நாகூர் வெட்டாறு தடுப்பணையை அமைத்து நாகை மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்படும். பனங்குடி பெரிய ஏரியை தூர் வாரி மழை நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் மீன்கள் கெடாமல் இருக்க மீன் குளிரூட்டும் கிடங்கு அமைக்கப்படும். நாகூர் தர்கா யாத்திரிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு தங்கும் விடுதி ஏற்படுத்தி தரப்படும். நாகையில் கருவாடு ஊற தளம் அமைக்கப்படும். மீனவர்களின் கடன்களை ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.