தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை- முத்தரசன் குற்றச்சாட்டு
ராஜபாளையம்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட குழு கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-,
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர்.
பட்டாசு ஆலைகளில் விபத்து தவிர்க்கப்பட வேண்டும். விபத்தை காரணம் காட்டி பட்டாசு ஆலைகளை மூட நேரிடும் போது பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக ஏறிக் கொண்டே போகிறது. அதேபோன்று சமையல் எரிவாயு விலையும் அதிகமாக ஏறிக்கொண்டே போகிறது.
தாங்கள் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர் இனாமாக தருகிறேன் என்றும் மீதி ஆறு சிலிண்டருக்கு காசு தர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கூறிவருகிறார்.
விலை உயர்வை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு பதிலாக, விலை ஏற்றத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்குப் பதிலாக, இதைக் கைவிட வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு சிலிண்டர் இனாமாக தருகிறோம் என்று கூறுவது அரசியல் நாகரிகம் ஆகாது.
தேர்தல் ஆணையம் தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. இதையும் நாங்கள் எதிர் கொள்வோம்.தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை செய்வதற்கு ஒரு மாத காலம் உள்ளது இதனால் எல்லாருக்கும் ஒரு அச்சம் உள்ளது .
இடைப்பட்ட காலத்தில் ஏதாவது சதி செய்வார்களோ என்ற எண்ணம் நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி எத்தகைய செயலையும் செய்யக்கூடிய கட்சியாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கூட்டும் கூட்டத்தில் இந்தக் கருத்துகளை நாங்கள் சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.