ஐ.பி.எல்.(IPL)
ரங்கசாமி

கூட்டணி குறித்து முடிவெடுக்க ரங்கசாமி காலதாமதம் செய்வது ஏன்?- பரபரப்பு தகவல்கள்

Published On 2021-03-04 11:06 IST   |   Update On 2021-03-04 11:06:00 IST
யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் தயவின்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

தேர்தலுக்கு பின் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டது. இடைத்தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தலில் ஓரணியாக தேர்தலை சந்தித்தனர்.

இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அமைக்க கட்சித்தலைமை வியூகம் அமைத்து வருகிறது.

காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.க்கள், வி.ஐ.பி.க்கள், வேட்பாளர் பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். பல்வேறு கட்சியிலிருந்தும் விலகி பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர்.

இதனால் பா.ஜனதா கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. மேலும் காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சி வாயத்துக்கு பா.ஜனதாவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனாலும், கூட்டணியில் பெரிய கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடுமோ? என ரங்கசாமி கருதுகிறார்.

முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துப்படுவோமா? என்ற சந்தேகமும் ரங்கசாமியிடம் இருந்தது. பா.ஜனதா மேலிடம், முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க சம்மதமும் தெரிவித்தது. ஆனாலும் ரங்கசாமி, தன்னை பகிரங்கமாக முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரி வருகிறார். அப்படி அறிவித்தால் தொகுதிகளில் சிலவற்றை பா.ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்பது அவரின் எண்ணமாக உள்ளது.

இந்நிலையில் பா.ஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது ரங்கசாமியின் கோரிக்கைகளை கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாகவும், அதுவரை பொறுத்திருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலதாமதம் செய்வது ஏன்? என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.

வழக்கமாகவே ரங்கசாமி வெளிப்படையாக எதனையும் அறிவிக்க மாட்டார். தேர்தல் காலங்களில் வேட்பு மனுதாக்கலின் இறுதிநாள் வரை கூட்டணி, வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை மர்மமாக வைத்திருப்பார்.

ஆனால், இம்முறை தேர்தல் அறிவிப்பு வெளியானதால் உடனடியாக கூட்டணியை அறிவிக்க பா.ஜனதா விரும்புகிறது. இதற்கிடையே புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. அந்த கூட்டணியை விட்டு வெளியேற விரும்புகிறது. கட்சி தலைமையிடமும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சமீபகாலமாக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி உடையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி ஒரு சூழல் உருவாகும்பட்சத்தில் தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணி அமைத்து புதுவை சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிடுகின்றனர்.

இதற்காக புதுவை தி.மு.க. தரப்பில் ரங்கசாமியை தொடர்ந்து தொடர்புகொண்டு திரைமறைவிலேயே பேசி வருகின்றனர்.

இதுதான் ரங்கசாமி பா.ஜனதா கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்காமல் காலதாமதம் செய்வதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.

ஆனாலும், என்.ஆர்.காங்கிரசில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க எவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ? அதே அளவு கூட்டணி அமைக்க ஆதரவும் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் வரும் காலத்தில் தனி கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால்கூட மத்தியில் பா.ஜனதா ஆட்சி இன்னும் 3½ ஆண்டுகள் நீடிக்கும். யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் தயவின்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதாவோடு இணக்கமாக செயல்பட்டு வந்துள்ளோம். காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதிலும் பா.ஜனதாவுக்கு துணையாக இருந்துள்ளோம். நட்போடு இருந்துவிட்டு திடீரென எதிரியாவது தீராத பகையை உருவாக்கும் என்றும் ரங்கசாமியிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News