சிறப்புக் கட்டுரைகள்
சூரிய நமஸ்காரம்

ஆரோக்கியம் நம் கையில்: உடல், மனதுக்கு சக்தி அளிக்கும் சூரிய நமஸ்காரம்- 130

Published On 2022-04-20 17:38 IST   |   Update On 2022-04-20 17:38:00 IST
யோக சாஸ்திரத்தில் உடல் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான யோகாசனங்களை நமது சித்தர்கள் வடிவமைத்துள்ளனர். அதே போல் முக்கியமான மூச்சு பயிற்சிகளையும் வடிவ மைத்துள்ளனர்.


யோக சாஸ்திரத்தில் உடல் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான யோகாசனங்களை நமது சித்தர்கள் வடிவமைத்துள்ளனர். அதே போல் முக்கியமான மூச்சு பயிற்சிகளையும் வடிவ மைத்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான யோகாசனங்கள் உள்ளன. அனைத்து ஆசனங்களையும் ஒரு நாளில் பயிற்சி செய்ய முடியாது. நேரமும் போதாது .

இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான யோகாசனத்தில் உடலுக்கும், உள்ளத்திற்கும் பலன் அளிக்கும் மிக முக்கியமான யோகாசனங்களையும் அதோடு மூச்சுப் பயிற்சியையும் தனியாக வடிவமைத்து அதனை சூரிய பகவானின் அருளை பெரும்படியான சூரிய நமஸ்காரம் என்று தோற்றுவித்தனர்.

இதில், உலகையே காக்கின்ற சூரிய பகவானை உள்ளத்தில் நினைத்து காலையில் கிழக்கு திசையிலும் மாலையில் மேற்கு திசையிலும் செய்யும் ஒரு யோகப் பயிற்சியை, மூச்சு பயிற்சியை நமது உடலால் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்வதாக வடிவமைத்தனர். இதில் முக்கியமான யோகாசனங்களும், மூச்சு பயிற்சியும் அடங்கியுள்ளன. இதுவே இதன் சிறப்பம்சமாகும்.

மந்திரம்:

மந்திரம் மனதை செம்மைப்படுத்துகின்றது. மந்திரம் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்முக எண்ணங்களை வழங்குகின்றது. மந்திரத்தில் இருந்து வரும் அதிர்வுகள், மனித உடலில் ரத்தத்தில் உள்ள அசுத்தத்தை நீக்கி ஒளி பெறச் செய்கின்றது.

எனவே சூரிய நமஸ்காரம் பயிற்சியில், பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக சூரிய பகவானின் அருள் பெற வேண்டி அவர் மீது இயற்றப்பட்ட மந்திரத்தை உச்சரித்து பயிற்சி செய்தால் பலன்கள் நிறைய உண்டு என்ற நோக்கில் சூரிய பகவானின் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.

சூரிய நமஸ்கார மந்திரம்:

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் (3 முறை)

“ஓம் ஆதவா, ஆயிரம் கதிரவா,

ஆதித்தியா, அருணா, பாஸ்கரா,

அலறி பானுவே, அழலவா, திவாகரா

தினகரா, ரவி பரிதியே,

செங்கதிரவா ,

அடியேன் செய்வினை

அகற்றிட வா வா

ஓம் சுவாஹா (3 முறை)

இந்த மந்திரத்தை மூன்று முறைகள் உச்சரித்தபின் சூரிய நமஸ்காரப் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். இதில் 12 முக்கிய யோகாசன நிலைகள் உள்ளன.

சூரிய நமஸ்காரம் 12 நிலைகள் செய்முறை:

விரிப்பின் மீது கிழக்கு திசை நோக்கி கையை கூப்பிய நமஸ்கார முத்திரையுடன் நிற்க வேண்டும் . கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். இது ஆயத்த நிலையாகும்.

கூப்பிய கையை பிரிக்காமல் பின் நோக்கி வளைந்து கையை தலைக்குமேல் பின்னோக்கி கொண்டு வரவேண்டும். கை முட்டியை வளைக்கக்கூடாது. இது சக்ராசன நிலையாகும்.

இப்பொழுது முன்னோக்கி குனிந்து கால்களை வளைக்காது கால் விரல்களை தொட வேண்டும். இது பாதஹஸ்தாசன நிலையாகும்.

உள்ளங்கைகளை தரையில் ஊன்றி வலது காலை வேகமாக பின்னோக்கி கொண்டு வர வேண்டும். கால் முட்டியை தரையின் மீது அழுத்தி நிமிர்ந்து பார்க்க வேண்டும். இது ஓட்ட பந்தயத்திற்கு தயாராக நிற்கும் நிலையாகும்.

இடது காலையும் வேகமாக பின்னோக்கி கொண்டு வர வேண்டும். இரண்டு பாதங்களையும் ஒன்று சேர்த்து கால் விரல்கள் மட்டும் தரை மீது வைத்து கால் முட்டிகளை நீட்டி உடம்பை பூமிக்கு இணையாக வைத்து உள்ளங்கைகளை ஊன்றி நிமிர்ந்து பார்க்கவும். கழுத்து பட்டியில் ஒரு பந்து வைத்தால் உருண்டு தரைக்கு வர வேண்டும். அந்தளவுக்கு உடம்பு பூமிக்கு இணையாக சமமாக இருக்க வேண்டும்.

இரண்டு முட்டிகளையும் தரையின் மீது வைத்து உடம்பை பின்னோக்கி கொண்டு வந்து குதிகால் மீது உட்கார வேண்டும். உள்ளங்கைகளை மாற்றம் செய்யாது நெற்றி பொட்டை தரையில் வைத்து ஓய்வு எடுக்க வேண்டும்.

உள்ளங்கைகளை ஊன்றி உடம்பை வேகமாக முன்னோக்கி கொண்டு வர வேண்டும். மார்பு, நெற்றி பொட்டு ஆகியவை தரையில் வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இதுவே அஷ்டாங்க நமஸ்காரம் என்று கூறுவார். அதாவது பாதம் 2 , கால் முட்டிகள் 2 , உள்ளங்கைகள் 2 , நெற்றி பொட்டு 1 , தலை 1, ஆக 8 பாகங்கள் தரையின் மீது இருப்பதால் இந்த பெயர். அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள். இடுப்பு பகுதி தரையில் படாது புட்டத்தை உயர்த்தி நிறுத்த வேண்டும்.

தலையை உயர்த்தி வானத்தை பார்க்க வேண்டும். முதுகை நன்கு பின் நோக்கி வளைந்து இருக்க வேண்டும். இது புஜங்காசன நிலையாகும்.

உள்ளங்கைகளையும் பாத விரல்களையும் நன்கு தரை மீது அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி தலையை குனிந்த நிலையில் இரண்டு கைகளின் இடையே கொண்டு வரும் பொழுது குதிகாலை பூமியின் மீது அழுத்தி வைக்க வேண்டும். இது ஒரு குன்று போன்ற நிலையாகும்.

திரும்பவும் 5வது நிலைக்கு வரவேண்டும். கால் முட்டிகளை தரையின் மீது வைத்து குதிகால்கள் மீது அமர்ந்து நெற்றி பொட்டை தரைமீது வைத்து ஓய்வு எடுக்க வேண்டும்.

நிமிர்ந்து, வேகமாக வலது கால் பாதத்தை இரண்டு கைகளுக்கு இடையே கொண்டு வந்து வைக்க வேண்டும்.

இதே போல் அடுத்த இடது கால் பாதத்தை இரண்டு கைகளுக்கு இடையில் வலது பாதத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். கால் முட்டிகளை வளைக்காது சரி செய்ய வேண்டும். இது பாதஹஸ்தாசன நிலையாகும்.

நிமிர்ந்து நின்று தயார் நிலையான நமஸ்கார முத்திரை செய்து நேராக பார்க்க வேண்டும்.

இது ஒரு சுற்று அல்லது ஒரு நமஸ்காரம் ஆகும், இது போல் 6 லிருந்து 12 முறை செய்தால் போதும்.

சூரிய ஒளியில் 7 வர்ணங்கள்

உலகில் எல்லா உயிர்களுக்கும், சக்திகளுக்கும் சூரியனே ஆதாரம் என்பது சாஸ்திர உண்மை. மக்கள் சூரியனை வழி படுவது தொன்று தொட்டு நடந்து வரும் பழக்கமாகும். இந்தியாவில் ரிக் வேதத்திற்கு முற்பட்டே சூரிய வழிபாடு இருந்து வந்துள்ளது.

சூரிய ஒளியில் ஏழு வர்ணங்கள் சேர்ந்துள்ளன என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. இதனையே ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிக்கிறது.

பாரசீக நாட்டில் தங்கிவிட்ட ஆரியர்கள் அக்கினியுடன் சூரியனை வழிபட்டனர்.

இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள் விஸ்ணுவின் அவதாரமாக சூரியனை வழி பட்டார்கள்.

சூரியன் உதயமாகும் நேரத்தில்

சூரிய நமஸ்காரம் செய்தால் பலன்கள்:

சூரியன் உதயமாகும் நேரம் சூரிய நமஸ்காரம் செய்தால் தோல், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகிவிடும்.

பாரசீக மத குருக்களான மாகாங்கள் சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாக திகழ்ந்தனர்.

பாஞ்சாலத்தை ஆண்டு வந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டது. அவனுக்கு மாகாங்கள் சிகிச்சை அளித்ததும் குணமாகிவிட்டது. உடன் அவர் பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தில் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டியுள்ளார்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா ?

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? என்பது பழமொழி. நாம் தினமும் அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்பே எழுந்துவிட வேண்டும். கண்கள் மிகவும் உணர்ச்சிமிகுந்தது. திடீரென்று பேரொளியை கண்டால் அதிர்ந்து தன் திறமையை இழந்துவிடும். சூரியன் வருமுன் விழித்துக் கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாய் பெருகிவிடும். சூரிய ஒளி கண்களுக்கு இதத்தை அளித்து ஒளியூட்டும்.

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

வயிறு, நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், குடல்கள், முதுகுத்தண்டு ஆகியவை பலம் பெறுகிறது.

சுவாசம், ரத்த ஓட்டம், ஜீரண உறுப்புகளின் வேலையை தூண்டும். நரம்புகள் மூளையின் மையத்திலுள்ளது. இப்பயிற்சியால் இந்நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகிறது.

அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்துகிறது. மெதுவாக செய்யும்பொழுது உடல் அல்லது மனம் சோர்வடைந்திருந்தால் புத்துணர்ச்சி பெறுகிறது.

உடல் எடையை குறைக்கிறது:

இப்பயிற்சியை ஆரம்பிக்க அரைமணி நேரம் முன்பாக தேன் கலந்த நீரை 1 டம்ளர் அருந்தி விட்டு பயிற்சி செய்தால் உடல் எடை சீக்கிரம் குறைகிறது.

பெண்கள் இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கர்ப்பம் தரித்த பிறகு அதிக பால் சுரக்கும்.

மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. வாத கோளாறுகள், வயிற்று கோளாறுகளை தடுக்கிறது.

நரம்பு தளர்ச்சி நோய்க்கு மிக முக்கியமான பயிற்சி:

உடல் நோய் எதிர்ப்புசக்தி கூடப் பெற்று, வலிமையையும், அழகும் மினுமினுப்பும் பெற்று திகழும். நீண்ட ஆயுள் உண்டாகும்.

கண் பார்வை சிறிது சிறிதாக விருத்தியடைந்து முழுப்பார்வையும் பெற்று பயன் பெறலாம்.

யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு 6 சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு பயிற்சியை தொடங்கினால் உடல் பிடிப்புகள் இன்றி ஆசனங்கள் எளிதில் பழகலாம். மூச்சு வாங்குவதில்லை.

யோகக் கலைமாமணி

பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Similar News