செய்திகள்

பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு

Published On 2018-07-30 06:51 GMT   |   Update On 2018-07-30 06:51 GMT
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
Tags:    

Similar News