ரஜினியின் பேச்சு மதவாத சக்திகளின் கருத்தை பிரதிபலிக்கிறது: தொல்.திருமாவளவன் பேச்சு
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க புதுவை வந்தார்.
புதுவையில் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்து முதல்-அமைச்சர் மற்றும் மதவாத சக்திகளின் கருத்துகளை பிரதிபலிப்பதாக உள்ளது. சாதியவாதிகள், மதவாதிகள் கருத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆட்சியாளர்,காவல்துறையினருக்கு எதிராக பேசக் கூடாது என்ற சிந்தனை மேலோங்கி உள்ளது.
தமிழக முதல்வரும், நடிகர் ரஜினிகாந்தும் சமூகவிரோதிகள் யார் .? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அவரின் மனிதநேய மாண்பை பாராட்டுகிறோம். அதேவேளையில் ரஜனிகாந்தின் கருத்து காவல் துறையின் ஒடுக்கு முறையை நியாயப்படுத்தும் போக்கில் உள்ளது.
அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள். இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்க கூடாது. வேல்முருகன் மீதான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்
இவ்வாறு திருமாவளவன் கூறினார். #thirumavalavan #rajinikanth #thoothukudiprotest