செய்திகள்

கடலூர், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் 3 புதிய தொழில்நுட்ப கல்லூரிகள்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

Published On 2018-05-30 15:11 IST   |   Update On 2018-05-30 15:11:00 IST
கடலூர், திருவள்ளூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு உயர் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் தேசிய மொத்த மாணவர் சேர்க்கை விகிதமான 25.2 சதவீதத்தை விட தமிழகம் அதிகமாக 46.9 சதவீதம் பெற்று முன்னணி இடத்தை பெற்றுள்ளது.

கடலூர், திருவள்ளூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிகளுக்கு கட்டிடம் கட்ட ரூ.9 கோடியும், முதலாம் ஆண்டுக்கு தேவையான கம்ப்யூட்டர், புத்தகங்கள் கொள்முதல் செய்ய ரூ.1½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 ஆசிரியர்கள் உள்ளிட்ட 135 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கல்லூரிகளும் 2018-19 கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் இதன் மீது பேசிய செம்மலைக்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், “உயர்கல்வித் துறையில் கடந்த 7 ஆண்டுகளில் 1,321 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 89 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஆராய்ச்சி படிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. யு.ஜி.சி. மூலம் அதிக நிதி பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். #TNAssembly
Tags:    

Similar News