செய்திகள்

சட்டசபையில் வீரப்பன், ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள்- இளங்கோவன்

Published On 2018-02-14 13:48 IST   |   Update On 2018-02-14 13:55:00 IST
சட்டசபையில் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். #TNAssembly #Elangovan

ஈரோடு:

ஈரோடு பி.பி.அக்ர காரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்.

இந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்வதில்லை அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அறிக்கை வழங்கி உள்ளார். இதை அவர் கொஞ்சம் கவனிப்பார் என நினைக்கிறேன் அதில் உள்ள ஊழலை ஒழித்தாலே போதும் பஸ் கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம்.

போக்குவரத்துதுறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துதான் பதவி உயர்வு வாங்கி உள்ளனர். பொறுப்புக்கு வரும் போதே லஞ்சம் கொடுத்து வருபவர்கள் தொடர்ந்து எந்த துறையாக இருந்தாலும் ஊழல்தானே செய்வார்கள்?

நமது முதல் அமைச்சருக்கே 14 தனியார் பஸ்கள் உள்ளன. இதேபோல் இன்னும் எத்தனை அமைச்சர்களுக்கு சொந்தமாக பஸ்கள் ஓடுகிறதோ... இல்லையென்று அவர்கள் மறுக்கட்டும் பார்க்கலாம். தைரியம் இருந்தால் வழக்குகள் வட போடட்டும். ஜெயலலிதா என் மீது போட்ட வழக்கை கூட தைரியமாக துணிச்சலாக சந்தித்தவன் நான்.

அம்மா ஸ்கூட்டர் என்ற திட்டத்தை தொடங்கி பகல் கொள்ளையடிக்கிறார்கள். 25 ஆயிரம் ரூபாய் மானியம்ம கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி மானியம் தருவதாக கூறி கொள்ளையடிக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் திருச்செங்கோடு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி போட்டு போட்டியிட்ட அவருக்கு நானே ஓட்டு போட்டுள்ளேன். அவரது ஊழல் ஆட்சியை இப்போது எதிர்க்கிறேன். இந்த ஊழல் ஆட்சி இனியும் தொடரக் கூடாது வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டால் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்தை சட்ட சபையில் திறந்து இருப்பது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் இனி சட்டசபையில் ரவுடிகள் படத்தையும் திறப்பார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல வருசமாக பல பேரை கொன்று குவித்து கோலோச்சி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் படத்தையும், பல பேரை கொன்று குவித்த ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம்.

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க ஆதரவு தெரிவித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அவர் மீது காங்கிரஸ் தலைமையகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார். #TNAssembly #Elangovan #tamilnews

Similar News