ரஜினி கூறிய கருத்துக்கு பதில் கூற அவசியமில்லை- செங்கோட்டையன்
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மதியம் நடந்தது. இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சாதனை- சரித்தரத்தை கவுரவிக்கும் வகையில் நாளை சட்டசபையில் அவரது உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைக்கிறார்.
மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.
இப்போது புதிய புதிய கட்சிகள் தொடங்கியும், தொடங்கப்பட்டும் வருகிறது. அவர்கள் கேட்கும் கேள்விக்கும், அவர்கள் பேசும் பேச்சுக்கும் என்னால் பதில் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் தீவிரமாக இறங்கி உள்ள ரஜினிகாந்த் கூறும்போது, தமிழ்நாட்டில் தான் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு செங்கோட்டையன் கூறும்போது, “இதைத்தான் முதலில் கூறிவிட்டேனே, தமிழ்நாட்டில் சிறிய சிறிய அளவில் பல கட்சிகள் வருகிறது. அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க அரசையும், அ.தி.மு.க கட்சியையும், யாராலும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” என்று கூறினார். #tamilnews #ministersengottaiyan #rajinikanth