செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

Published On 2017-11-30 15:13 GMT   |   Update On 2017-11-30 15:13 GMT
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். இதேபோல் டிடிவி தினகரன், தீபா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க.வுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளன. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதில்ல என்ற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

‘இந்த இடைத் தேர்தலில் மட்டுமே தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம். தி.மு.க.வுடன் கூட்டணி எதுவும் இல்லை. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட மாட்டோம். தனி மேடையில் இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை முழுமையாக தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்’  என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.
Tags:    

Similar News