செய்திகள்

கவர்னருக்கு எதிராக மு.க.ஸ்டாலின் அடிக்கும் பந்து எது?

Published On 2017-08-31 06:46 GMT   |   Update On 2017-08-31 06:46 GMT
என் கோர்ட்டில் பந்து இல்லை என்று கவர்னர் கூறி விட்டதால் எங்கள் பந்தை அடிப்போம் என்று முகஸ்டாலின் சூசகமாக கூறி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

தமிழக அரசியல் களத்தில் சுற்றும் பந்து யாரை வீழ்த்தும்? யாரை வெற்றி வாகை சூட வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

என் கோர்ட்டில் பந்து இல்லை என்று கவர்னர் கூறி விட்டார்.

என்னிடம் இருக்கும் பந்தை வீசுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். ஆட்டம் இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.

19 எம்.எல்ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் எடப்பாடி அரசு நம்பிக்கை ஓட்டு பெற வேண்டும் என்று தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கவர்னரிடம் முறையிட்டன.

நேற்று 4 கட்சியினர் சந்தித்த போது கவர்னர் அளித்த பதில் எதிர்க்கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இப்போது பந்து என் கோர்ட்டில் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. முதல்- அமைச்சரைத்தான் மாற்ற சொல்லி இருக்கிறார்கள். அது அவர்கள் உள்கட்சி பிரச்சினை. என்னால் தலையிட முடியாது என்று மறுத்து விட்டார்.


கவர்னர் பந்து என்று சொன்னது 19 எம்.எல். ஏ.க்களைதான். அவர்கள் வேறு கட்சிக்கு சென்றால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று திட்ட வட்டமாக கூறி விட்டார்.

இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், கவர்னர் நடவடிக்கை எடுக்கா விட்டால் எங்கள் கையில் இருக்கும் பந்தை அடிப்போம் என்று எச்சரித்துள்ளார். அவர் குறிப்பிடுவது 98 எம்.எல்.ஏ.க்களைத்தான். கவர்னர் பந்தை அடிக்க வில்லை என்றால் எங்கள் பந்தை அடிப்போம் என்று அவர் சூசகமாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அடுத்து என்ன? நடக்கும் என்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சி களை பொறுத்தவரை இது அவர்கள் கையில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்த தேவையான எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்சினையை சுட்டிக்காட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்ட மிட்டுள்ளனர்.

சட்டசபையில் குட்காவை காட்டிய விவகாரம் நடந்து முடிந்து 40 நாட்கள் ஆகி விட்டன. இப்போது அது தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது உரிமை மீறல் பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அஸ்திரங்களும் தாக்குதலுக்கு தயாராக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் என்பது தெளிவாகி விட்டது.

ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க நேர்ந்தால் ஆளும் கட்சி தரப்பில் இருந்து இந்த இரு அஸ்திரங்களும் வீசப்படலாம். அவ்வாறு வீசினால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும், தினகரன் அணியினர் 19 பேரும் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டு களத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இதன் மூலம் ஓட்டுரிமை பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலம் 193 ஆக குறையும். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க 97 எம்.எல்.ஏ.க்கள் பலம் போதுமானது.

இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் விளைவு விபரீதமாகி விடும். ஏற்கனவே இதே போல் ஜானகி- ஜெயலலிதா இடையே ஏற்பட்ட பலப்பரீட் சையில் இதே போன்ற நடவடிக்கையை அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் எடுத்தார். அதனால் சட்டசபையே போர்க்களமான வரலாறும் உள்ளது.

எதையும் சமாளித்து அந்த மாதிரி வாக்கெடுப்பு நடந்தால் அதன் பிறகு தி.மு.க.வுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. மேலும் எதிரணியாக செயல் படுபவர்கள் கூட கை கோர்த்து செயல்படலாம். அதன்பிறகு பயில்வானோடு மோத வேண்டிய நிலை உருவாகும்.

அதற்கு விடாமல் அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கும் பெனால்டி கிக்கை சமயோசிதமாக அடித்து கோலாக்கிட தி.மு.க. விரும்புகிறது. அதனால்தான் தன்னிடம் இருக்கும் பந்தை அடிக்கப் போவதாக மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 98 ஆக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக அனைவரும் ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தி.மு.க. பந்தை இவ்வாறு வீசினால் தினகரன் அணியினரும் தங்கள் எதிரி எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த துணை போகலாம். அந்த அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யலாம். அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே எங்களுக்கு எம்.எல்.ஏ. பதவி தேவையில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்தால் அரசு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும். ஒன்று ஆட்சி கலையும் நிலை வரும். அல்லது 120 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அது சாத்தியமில்லை. தானாகவே அரசு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு செல்லும்.

Tags:    

Similar News