செய்திகள்
மணமக்களை மு.க.ஸ்டாலின் வாழ்த்திய போது எடுத்த படம்.

அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும்; தி.மு.க. ஆட்சி மலரும்- மு.க.ஸ்டாலின்

Published On 2017-08-28 13:29 IST   |   Update On 2017-08-28 13:29:00 IST
அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும் எனவும் தி.மு.க. ஆட்சி மலரும் என விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விருத்தாசலம்:

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கணேசன்-பவானி தம்பதியரின் மகன் என்ஜீனியர் வெங்கடேசனுக்கும், பாண்டியன்-வளர்மதி தம்பதியரின் மகள் பூங்காவனத்திற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ராணி மகால் எதிரே உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசலாமா? என்கிறார்கள். நான் இங்கு வந்து என்ன பேசப்போகிறேன் என்று மக்களும் குறிப்பாக பத்திரிகையாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

விமானத்துக்கு செல்லும் போதும், வரும்போதும் விமான நிலையத்திலேயே பேட்டி கொடுப்பது என்பது பாரதிய ஜனதாவை சேர்ந்த அம்மையார் ஒருவர் பணியாக வைத்துள்ளார். அவர் திராவிட கட்சியை அழிப்பதாக கூறி வருகிறார்.

திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

மக்கள் பிரச்சனையை மறந்து முதல்-அமைச்சர் தனது பதவியை மட்டுமே தக்க வைக்க துடிக்கிறார். விவசாயிகள் டெல்லியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கதிராமங்கலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

அ.தி.மு.க. தற்போது பெரும்பான்மை குறைந்து மைனாரிட்டி ஆட்சியாக மாறிவிட்டது.


பிரதமர் மோடி தமிழகத்தில் கட்டபஞ்சாயத்து நடத்தி வருகிறார். துணை முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கையை பிடித்து இணைத்து வைத்து விட்டு செல்கிறார்.

ஆனால் பெரும்பான்மை குறித்து அவரிடம் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வால் தமிழகத்தில் யாரும் மருத்துவ படிப்பு படிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக உரிமையை டெல்லியில் அடகு வைத்து விட்டார்கள்.

மக்கள் எப்போது விடிவு காலம் வரும் என கேட்கிறார்கள்? அந்த விடிவு காலம் விரைவில் வரும். துரைமுருகன் தலைமையில் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனு குறித்து ஜனநாயக முறைப்படி கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆட்சி முறைகேடுகள், ஊழல் குறித்து பேசினேன். தடை செய்யப்பட்ட குட்கா, திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது என பேசியதற்கு ஆளுங்கட்சியினர் ஆதாரம் கேட்டனர். ஆதாரத்துக்காக எடுத்து காட்டினோம். காட்டியது தவறா? குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் செய்து விட்டார் என தற்போது செய்திகள் வருகிறது. நான் சொன்ன போது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் 40 நாட்கள் கழித்து குட்கா விவகாரத்தில் தற்போது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளிவருகிறது.

தற்போது அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்களுக்கு பெரும்பான்மை குறைந்து விட்டதால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கினால் தப்பித்து விடலாம் என நினைக்கின்றனர். அப்படி நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவோம்.

தற்போது நடக்கிற ஆட்சியை கவிழ்க்க அ.தி.மு.க.வினரே தயாராக உள்ளனர். விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News