கமலஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது: ஜி.கே.மணி பேட்டி
ஈரோடு:
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மனிதன், விலங்குகள் தாவரங்கள் எல்லா உயிரினங்களுக்கும் நீர் மிகவும் அவசியம் தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர் பங்கீடு, நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படவில்லை. காவிரி தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
80 விழுக்காடு மக்களுக்கு குடிநீர் தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டு காவிரி வரலாற்றில் இந்தாண்டுதான் நீர் குறைவாக உள்ளது. எனவே காவிரியில் நாம் இழந்த உரிமையயை மீட்க பா.ம.க. சார்பில் இந்த மாதம் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடக்க உள்ளது.
இந்த பிரசார பயணம் ஒகேனக்கல்லில் தொடங்கி பூம்புகாரில் நிறைவடைகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.முறையில் இதுவரை வரியே விதிக்கப்படாத 550 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கியமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கருத்து கூறுவது அனைத்து குடிமகன்களின் கடமை. இந்த விஷயத்தில் தனது கருத்தை பதிவு செய்த கமலஹாசனை அமைச்சர்கள் மிரட்டும் தொனியில் பேசியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.