செய்திகள்

தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று சொன்ன மோடி இப்போது என்ன செய்கிறார்?: இளங்கோவன் கேள்வி

Published On 2017-07-09 16:14 IST   |   Update On 2017-07-09 16:14:00 IST
தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று சொன்ன பிரதமர் மோடி இப்போது என்ன செய்கிறார்? என்று ஈவிகே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மோடி அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக நெசவாளர்கள் ஜவுளி துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவது போல் இருந்தது.

இதற்கு மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இதே மோடி என்ன சொன்னார்? என் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று சொன்னார். அப்படி சொன்ன மோடி இப்போது என்ன செய்கிறார்?


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுவுக்கு எதிராக போராட்டம் போன்ற பெண்கள் நடத்தும் போராட்டத்தை பார்த்து கிண்டலடிக்கிறார். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கிறது. குற்றங்கள் குறைந்து விட்டது என்று கூறுகிறார். சட்டம்-ஒழுங்கு புத்தகத்தில்தான் ஒழுங்காக உள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் குற்றங்கள் பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் இனி ஆட்சி அமைக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகியோர் காங்கிரஸ் தயவால்தான் முதல்-அமைச்சர்கள் ஆனார்கள். ஆகவே இனியும் காங்கிரஸ் துணை இல்லாமல் யாரும் முதல்வர் ஆகி விட முடியாது.

பா.ஜ.அரசை அ.தி.மு.க. கை நீட்டி பேச பயப்படுகிறது. அப்படி பேசினால் மறுநாள் நாம் எங்கே கம்பி எண்ண போய்விடுவோமோ.. என்று பயப்படுகிறார்கள்.

இதனால் தான் மாறிமாறி ஒவ்வொருவரும் பா.ஜ.க காலடியில் விழுந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் துன்புறுத்தி வருகிறது. துப்பாக்கி முனையில் கடத்தி செல்கிறார்கள். சிறை பிடிக்கிறார்கள். கற்களால் வீசி தாக்குகிறார்கள். இதை நிரந்தரமாக போக்க தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டியின்போது மாநகர மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, துணை தலைவர் ராஜேஸ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்ஷா உள்பட பலர் இருந்தனர்.

Similar News