செய்திகள்

முழு அடைப்பு போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2017-04-23 16:11 IST   |   Update On 2017-04-23 16:11:00 IST
விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மைய நூலகம் சார்பில் புத்தகத் தினவிழா இன்று ஈரோடு திண்டலில் உள்ள யூ.ஆர்.சி பழனியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். செல்வகுமார சின்னையன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராம லிங்கம், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிராமப்புற நூலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது. இந்த பற்றாக்குறையை தீர்க்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி போதிய பணியாட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் 352 நூலகங்கள் சிறந்த நூலகங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களில் ரூ.2 கோடியே 57 லட்சம் செலவில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு கொடுக்க வேண்டும். என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆளும் அரசு எப்போதும் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுவதில்லை விதி முறைக்கு உட்பட்டுதான் நடப்பது வழக்கமாக உள்ளது.


எனவே இந்த போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம். எப்போதுமே போராட்டங்களில் அரசு பங்கேற்காது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Similar News