அ.தி.மு.க.வை ஒரே அணியில் இணைக்க வேண்டும்: தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேட்டி
பெருந்துறை:
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்து விட்டது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அணியும், முன்னாள் முதல்- அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும் ஒரே அணியில் இணைய பேச்சு வார்த்தை நடந்தது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2 அணியினர் இடையே நடக்கும் பேச்சு வார்த்தை தொண்டர்கள் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை வலுபடுத்தவும் எதிரிகளுக்கு சிறு இடம் தராமல் அமைய வேண்டும்.
தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் திரும்பி சென்றவர்களிடம் சுமூகமாக பேசி நல்ல கருத்தை ஏற்கும் விதத்தில் இரு தரப்பினை சேர்ந்த மூத்த தலைவர்கள் செயல்பட வேண்டும்.
இது தொண்டர்களின் விருப்பமும், கட்சியில் விசுவாசமிக்க எங்களை போன்றவர்களின் விருப்பமும் ஆகும். நிபந்தனைகளை இரு தரப்பினரும் பக்குவமாக பேசி கட்சிக்கு தேவைப்படும் நியாயமான கருத்தை ஏற்று முடிவு எடுக்க வேண்டும்.
இரு தரப்பினரும் வேறு பாடுகளை மறந்து எதிரிகளுக்கு ஒரு சிறிய இடமும் தராமல் செயல்பட்டு அ.தி.மு.க. என்ற ஒரே கட்சியை ஒரே அணியை கொண்டு வர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து அம்மா வழியில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.