செய்திகள்

அமைச்சர் வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை

Published On 2017-04-13 05:05 GMT   |   Update On 2017-04-13 05:05 GMT
விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது கல்குவாரி, உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கரை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது விஜயபாஸ்கர் அளித்த பதில்கள் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

அடுத்த கட்டமாக விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரையும் சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பல கோடி பணம் கைமாறப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் சிக்கி உள்ளதால் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் விஜயபாஸ்கரிடம் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது பற்றி உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் நேற்று இது தொடர்பாக விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, டாஸ்மாக் கடை பிரச்சினை குறித்துதான் முதல்- அமைச்சர் ஆலோசனை நடத்தினார். வேறு பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்திய வி‌ஷயம் எங்களுக்கு தெரியாது என்றனர்.

Similar News