செய்திகள்

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை பா.ஜனதா தடுக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-02-02 13:37 IST   |   Update On 2017-02-02 13:37:00 IST
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை பா.ஜனதா தடுக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவை வலுப்படுத்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கு 4 நாள் பயிற்சி முகாம் பெரம்பூரில் நடைபெறுகிறது. 5-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது.

வருங்கால அரசியல் திட்டங்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் விவாதிக்கப்படும். பயிற்சி முகாமில் பங்கேற்க மத்திய தலைமை நிர்வாகிகள் வருகிறார்கள்.

மத்திய அரசு பட்ஜெட் எல்லோரும் பாராட்டும் வகையில் உள்ளது. இதை விமர்சிக்கிறார்கள் என்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. இதை மத்திய மந்திரி நட்டா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

பாலாற்றின் குறுக்கே 2 அணைகளை கட்ட ஆந்திரா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு ஆந்திரா அரசிடம் பேசி அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த மத்திய அரசிடம் தமிழக பா.ஜனதா சார்பில் வலியுறுத்தப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் 35 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வெறும் அறிவிப்புடன் உள்ளது. பா.ஜனதா அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் வகையில் ஆட்சி செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News