செய்திகள்

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா விசுவாசிகள் பா.ஜனதாவில் இணைய வேண்டும்: எச்.ராஜா

Published On 2017-01-18 11:20 IST   |   Update On 2017-01-18 11:20:00 IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கவில்லை.

அதனால்தான் நான் சிங்கம்புணரி, புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைகோட்டையில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டேன். மஞ்சுவிரட்டு நடத்துபவர்களை கைது செய்யக்கூடாது.

ஜெயலலிதா இறந்தபோது அவர் மீது கொண்ட நட்பு காரணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து மலரஞ்சலி செலுத்தினார். 5ம் தேதி இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏகமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தனர். இதற்கு சட்டப்படி மத்திய அரசு ஒத்துழைப்பு நல்கியது. பொதுச்செயலாளராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்த சர்ச்சை எழுந்தபோது உட்கட்சி விவகாரம் என்பதால் பா.ஜ.க எந்த கருத்தும் சொல்லவில்லை.

இது தெரியாமல் சசிகலா கணவர் நடராஜனும், திவாகரனும் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வம்பை விலைக்கு வாங்கும் நடராஜனின் சூது இது.

அ.தி.மு.க. வை உடைக்க பா.ஜ.க வேண்டும் என்பது இல்லை. நடராஜனும், திவாகரனும் சேர்ந்து அதை சுக்கு நூறாக உடைத்து விடுவார்கள். அ.தி.மு.க.வை பற்றி பேச நீங்கள் யார்?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைய வேண்டும்.

தமிழகம் 2 குடும்பங்களின் ஆட்சியை தாங்காது. இதற்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் நரி உலகை பார்த்து உபதேசம் சொன்னதாம் என்பது போல் இருக்கிறது நடராஜன் பேச்சு.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News